
▶
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததால் காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் 27 பேர் கொண்ட குழுவினர் ஆர்.கே. நகரில் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டனர்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிகபட்ச வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று மகுடம் சூடப் போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
இடைத்தேர்தல் குறித்து பேராசிரியர் எஸ். ராஜநாயகம் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்துக் கணிப்பு இன்று வெளியானது. அதில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 35.5 சதவீத வாக்குகளைப் பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் 28.5% சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் மருது கணேஷும், 21.3% சதவீத வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர் இ. மதுசூதனன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இதுபோக நாம் தமிழர் வேட்பாளர் 4.6% சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 1.5% சதவீத வாக்குகளையும் பெற்று முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பெறுவார்கள் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 91.6 சதவீத வாக்காளர்கள், தினகரனின் சின்னம் பிரஷர் குக்கர் என்பதை சரியாக அடையாளம் கண்டனர். 81 சதவீதம் பேர் மதுசூதனன் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதையும், மருது கணேஷின் சின்னம் உதய சூரியன் என்பதை 77.8% வாக்காளர்களும் சரியாக அடையாளம் கண்டுள்ளனர்.
அதே சமயம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகான ஆட்சி பற்றி கருத்துக் கேட்டதற்கு, சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றும், பாஜக ஆட்சி பற்றியும் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமானோர் கூறியுள்ளனர்.
![]()
