தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.
ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.கடந்த 41 நாட்களாக கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மினிபஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடவில்லை. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
Mobile lighting in #SterliteProtest #BanSterlite #BanSterliteSaveThoothukudi #SaveThoothukudi pic.twitter.com/I5xr5OLR4z
— 🌱Nature Of Nellai🌳 (@NatureOfNellai) March 24, 2018
பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் ,WGC ரோடு, VEடு, VVDசிக்னல், தந்திஆபிஸ், முத்தையாபுரம், காந்திசிலை, 2ம்கேட், சிவந்தாகுளம், லேவிஞ்சிபுரம், சிதம்பரநகர், ப்ரயண்ட்நகர், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், சோட்டையன்தோப்பு, புதுகோட்டை, வாகைகுளம், கோரம்பள்ளம், முள்ளகாடு, கேம்ப் போன்ற பகுதிகளில் ஸ்டெர்லைட்க்கு எதிராக தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்ட பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 20,000-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை இயக்குநர் அனில் அகர்வாலின் லண்டன் வீட்டுக்கு எதிரே தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2018
![]()



