ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான் தனது எதிரி எனவும், கமல் தன்னுடைய எதிரி இல்லை எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், இளையராஜா, விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட அணைத்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு பங்கேற்க செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும். பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போனாலும் உலகம் அழிந்துவிடும். எனவே பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை. மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது. என்னுடைய எதிரி கமல் இல்லை. ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான் எனது எதிரி. காவிரிக்காக தமிழகமே போராடும் போது, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லதுதான். அப்படி இல்லையென்றால் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த ஐபிஎல்லில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். காவிரிக்காக போராடும் சூழலில் கர்நாடகத்தை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம். கர்நாடகாவில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்கள், மாநில அரசு பார்த்துக் கொள்ளும். ” என்றார்.
![]()

