கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 15-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன.
இதனிடையே, இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது. இதன் முடிவுகளை, அந்த தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.
இதில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 91 இடங்களையும், பாஜக 89 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களையும், பிற கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொங்கு சட்டசபை அமைய அதிகம் வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது.
கடந்த 2013 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 122 இடங்களில் வென்றது. பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

