Nadella

உலக புகழ் பெற்ற கணிப்பொறி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெள்ளா என்ற இந்தியர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான இயக்குனர் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூடிய விரைவில் புதிய சி.இ.ஓ. பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

47 வயதாகும் சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்டின் கிளவுட் பிஸினஸுக்கு தலைமை தாங்குகிறார். ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்தவர். மணிபால் பல்கலைகழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் படித்தவர். விஸ்கான்ஸின் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலும், சிகாகோ பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர்.

1992-ம் ஆண்டு மைக்ரோ சாப்டில் சேர்ந்த இவர் கடந்த 22 வருடங்களாக அங்கு பணிபுரிகிறார். மைக்ரோசாப்டில் சேருவதற்கு முன்பு சன் மைக்ரோ சிஸ்டத்தில் வேலை பார்த்தார். தற்போது சி.இ.ஓ.வாக இருக்கும் ஸ்டீவ் பால்மர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் அனலிஸ்ட்டுமான ராக்கி அகர்வால் கூறும் போது நாதெள்ளா சிறந்த தேர்வு என்று யூ.எஸ்.ஏ. டுடே பத்திரிகையில் தெரிவித்திருக்கிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 39 ஆண்டுகள் ஆகின்றன. முதலில் பில் கேட்ஸ் அவரைத் தொடர்ந்து ஸ்டீவ் பால்மர் ஆகியோர் தலைவராக பொறுப்பு வகித்தனர். இதுவரை பிரபலமானவர்களே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்துள்ளனர். முதன் முறையாக ஒரு புதிய நபர் தலைமை பொறுப்புக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Loading