AAP government loses majority, Independent MLA withdraws support

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் கெஜ்ரிவால் தலைமையிலான இந்த அரசு அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

முதலில் சட்டமந்திரி சோம்நாத் பார்தி நடத்திய சோதனையில் சர்ச்சை எழுந்தது. பிறகு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பின்னி, கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அவர் ஆம் ஆத்மியில் இருந்து விலக்கப்பட்டார்.

இந்நிலையில், கெஜ்ரிவால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த சுயேட்சை எம்.எல்.ஏ. ராம்பீர் ஷோகீன் (முண்ட்கா தொகுதி) இன்று தனது ஆதரவை வாபஸ் பெற்றார். இதனால் ஆம் ஆத்மி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது.

மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண குறைப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. சோயிப் இக்பால், சுயேட்சை உறுப்பினர் ஷோகீன் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னி ஆகியோர் கடந்த 3-ம் தேதி எச்சரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கெஜ்ரிவால் உறுதி அளித்திருந்தார். ஆனால் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை கெஜ்ரிவால் தீர்க்காததால் வாபஸ் பெற்றதாக ஷோகீன் தெரிவித்தார்.

ஏற்கனவே ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் கெஜ்ரிவாலுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Loading