சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ மனித உரிமைகள் பெயரால் இலங்கையின் உள்விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது என்று கூறியுள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசுடன் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை, பிரதேச ஒற்றுமைக்கு சீனா பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்த அவர், உள்நாட்டு விவகாரங்களை சமாளிக்கக் கூடிய திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்துள்ள இலங்கை, தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
![]()

