ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீராங்கனை மிராபாய் சானு, பளுதூக்குதல் போட்டியில், மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மிராபாய் சானு, மொத்தமாக 196 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். 196 கிலோ எடையைத் தூக்கியதன் மூலமாக அவர் காமன்வெல்த் விளையாட்டு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

மணிப்பூரில் இம்பாலில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று பிறந்தார் மிராபாய். குழந்தையாக இருக்கும்போதே இந்திய பளுதூக்கு வீராங்கனை குஞ்சுராணி தேவியின் மிகப்பெரிய ரசிகையாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தற்போதைய போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார். கடந்த 2017-ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார் மிராபாய். இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ள இந்தியா, இன்றைய மதியம் நிலவரப்படி 2 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

#CWG2018 #GC2018 #Weightlifting #GC2018 #MirabaiChanu

Loading