கத்துவா, உன்னாவ் கற்பழிப்பு சம்பவங்கள் விவகாரத்தில் இன்று வாய் திறந்த பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்ககோரி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொடுமைகளுக்கு மத்திய – மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய மெழுகுவர்த்தி பேரணி இச்சம்பவங்களின் பக்கம் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.

இந்த சம்பவங்களை கண்டித்து மத்திய மந்திரிகள் மேனகா காந்தி, வி.கே. சிங் ஆகியோர் கருத்து வெளியிட்டனர். இருப்பினும், பிரதமர் இவ்விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்புவிழாவில் பங்கேற்று உரையாற்றியபோது இதுதொடர்பாக மவுனம் கலைத்த பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

சமூகவலைத்தளவாசிகளும் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ட்விட்டரிலும் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Loading