மதுரை: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார். இதனை ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மதுரை: நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. அதன்படி மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இன்று காலை தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, கௌதமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின் பேசும்போது, “கற்புக்கரசி கண்ணகி நீதிகேட்டு கிளம்பியதுபோல், நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம் தொடங்கியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு போட்டு ஆறு வாரக் காலம் முடியும் நேரத்தில் எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மத்திய அரசே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. தமிழகத்தை மண்டலம் மண்டலமாகப் பிரித்து மோசமான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் என்று சொல்லி சதித் திட்டத்துடன் அந்த நல்ல திட்டத்தை நிறுத்தினார்கள். இப்போது ஆபத்தான திட்டங்களை நாங்கள் எதிர்க்கும்போது மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ நியூட்ரினோ திட்டத்தை பிரதமர் மோடி குஜராத்திலோ அல்லது வேறு மாநிலங்களில் அமைக்க வேண்டியதுதானே ஏன் தமிழகத்தில் அமைக்கவேண்டும் என கேள்வி எழுப்பினர்.இந்த நியூட்ரினோ திட்டத்தால் முல்லை பெரியாறு அணை, இடுக்கி அணை பாதிக்கப்படும் எனவும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறினார்.

இந்த நடைப் பயணத்துக்கான அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் மூவேந்தர்களின் சின்னங்கள் இடம்பெற்ற கொடியை ஸ்டாலின் வெளியிட்டார்.

Loading