திரைப்பட பாணியில், தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு லட்சம் கேட்டு மருத்துவர் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 17-ஆம் தேதியன்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். பின்னர் தஞ்சை புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள கே.எஸ்.டி.சி என்ற பிரபல தனியார் மருத்துவமனையில் ரவி்ச்சந்திரன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்வதற்காக மருத்துவர்கள் ரவிசந்திரனின் குடும்பத்தாரிடம் நன்கரை லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவரை அவரச சிகிச்சை பிரிவில் வைத்திருந்ததால், கடந்த மூன்று நாட்களாக யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ரவிச்சந்திரன் மூன்று நாட்களுக்கு முன்பே இறந்தது உறவினர்கள் தெரியவந்தது. இறந்த உடலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ரவிச்சந்திரனை அழைத்துச் செல்வதாக அவரது குடும்பத்தினர் கூறிய போது, வாஞ்சிலிங்கம் என்ற மருத்துவர் மேலும் ஒரு லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தை தராவிட்டால் சுட்டுவிடுவேன் என கூறி வாஞ்சிலிங்கம் துப்பாக்கியை காட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.ரமணா திரைப்பட பாணியில் மருத்துவர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()

