மே18, விஜயகாந்த் – ராமதாஸின் தவறான அணுகுமுறையால்தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற முடியவில்லை என்றும் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
விஜயகாந்தின் ஆரம்ப கால அரசியல் ஊசலாட்டங்களும், ராமதாஸின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக் கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக் கூத்துகளும், கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில்கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன.
நரேந்திர மோடிக்கான ஆதரவலையும், காங்கிரஸூக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
போலி மதச்சார்பின்மையும், ஜாதிய அழிவு சக்திகளும் இந்த தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன.
மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் ஜாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.மேலும் தமிழகத்தில் பாஜக கூட்டணி விஜயகாந்த், ராமதாஸ் ஆகிய இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.
மாற்று அரசியல் மலர்வதற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டுமொத்த தோல்வியாகக் கருதுகிறோம். 2 ஆண்டுகளுக்குள் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போதுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுப்பதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம்தான் காட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
![]()

