PMK refuses to part with constituencies

சென்னை, மார்ச் 06: : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜ கூட்டணியை நேற்றே இறுதி செய்வதற்கான முயற்சிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டனர். ஆனால் தேமுதிக- பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்தநிலையில் இன்று நடக்கும் பா.ம.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. 10 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரும்பியதன் காரணமாக, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பா.ம.க. ஈடுபட்டது.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் 6–ந்தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இந்த கூட்டம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பாரதீய ஜனதா கூட்டணி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கருத்தும் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பா.ம.க. கூட்டணி தொடர்பாக தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளது.

Loading