மார்ச் 24, உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, நடிகை நக்மாவிடம், காங்., எம்.எல்.ஏ., அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி., மீரட் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளராக நடிகை நக்மா களம் இறக்கப்பட்டுள்ளார். மீரட் மட்டுமின்றி மாநிலத்தின் பல இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்ற அவரிடம், காங்., எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார்.
பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து, கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தமிட்டார். எம்.எல்.ஏ., வின் செயலால் அதிர்ச்சி அடைந்த நக்மா, அவரின் கையை உதறிவிட்டு, வேகமாக நடையை கட்டினார். நக்மாவின் முகம் வாடியது; கோபமடைந்த அவர், அங்கிருந்து வேகமாக நடந்து சென்று பிரசார வேனில் ஏறி புறப்பட்டுச் சென்றார். எனினும், இந்த விவகாரம் குறித்து, நக்மா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், காங்., எம்.எல்.ஏ., வின் இந்த செயலுக்கு மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()

