மார்ச் 19, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் புதிய திருப்பமாக, ரேடாரில் இருந்து தப்புவதற்காக விமானம் தாழ்வாக பறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலேசிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தை தேடும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் விமானம் மாயமானதை அடுத்து மிகவும் தாழ்வான பகுதியில் பறந்துள்ளதை மாலத்தீவை சேர்ந்த மக்கள் பார்த்துள்ளனர் என்று அந்நாட்டு செய்தி இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாலத்தீவின் குடா குவாதூ என்ற பகுதியை சேர்ந்த மக்கள் மார்ச் 8ம் தேதி காலை 6:15 மணிக்கு மிகவும் தாழ்வான பகுதியில் விமானம் பறந்ததை பார்த்தோம் என்று கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் பார்த்த விமானம் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானங்கள் போன்று வெள்ளை நிறத்துடனும் அதில் சிவப்பு கோடுகளும் காணப்பட்டது என்று கூறியுள்ளனர் என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் வடக்கில் இருந்து தென்கிழக்காக மாலத்தீவின் அட்டு தீவை நோக்கி பறந்தது என்று கூறியுள்ளனர். விமானம் பறந்தபோது மிகவும் நம்பமுடியாத உரத்த சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர் என்று இணையதள தகவல்கள் தெரிவித்துள்ளன.
![]()

