மார்ச்.5 : பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையில் தனி கூட்டணி அமைகிறது. இதில் ம.தி.மு.க. ஏற்கனவே இணைந்து விட்டது. பா.ஜனதா அணியில் பா.ம.க., தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டது. முதலில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இந்த கட்சிகளுடன் பேச்சு நடத்தினார்.
பின்னர் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற விஷயங்களை அந்தந்த கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் பேசி வந்தனர்.
பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணி சேரமாட்டோம் என்று முடிவு எடுத்து 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்குப் பின்பு அரை மனதுடன் பாரதீய ஜனதாவுடன் கூட்டணிக்கு சம்மதித்தது. ஆனால் எக்காரணம் கொண்டும் நாங்கள் அறிவித்த தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டது.
விஜயகாந்த் தரப்பில் 20 தொகுதிகள் கேட்கப்பட்டது. கடைசியில் 18 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் தே.மு.தி.க. நின்றது.
அதற்கு பா.ஜனதா தரப்பில் 12 தொகுதிகள் தருகிறோம் என்று சொல்லி கடைசியாக 14 தொகுதிகளும் மேல்_சபை எம்.பி. பதவியும் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள தே.மு.தி.க.வும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன்பே இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அவர் சென்னை திரும்பியதும் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. அனேகமாக பாரதீய ஜனதா – தே.மு.தி.க. கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிய வருகிறது.
வருகிற 8_ந்தேதி டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பிரசார குழு கூட்டம் நடக்கிறது. அன்று பாரதீய ஜனதா 2_வது வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி ஆலோசனை நடக்கிறது.
எனவே அதற்கு முன்னதாக 2 நாளில் மாநில அளவிலான கூட்டணியை இறுதி செய்து முடிக்குமாறு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா தனது தமிழ்நாடு கூட்டணியை இன்று அதிகாரப்ஞீர்வமாக அறிவிக்கிறது.
கூட்டணி தொடர்பாக பா.ஜனதா கட்சியின் நிலை பற்றி தமிழ்நாடு மாநில செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பாரதீய ஜனதா கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிடுகிறார். கூட்டணி அறிவிப்புக்குபின் மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பா.ம.க. அந்த அணியில் இடம்பெறுமா? என்பது தெளிவாகவில்லை.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகள் கேட்கிறது. அதற்கு 8 தொகுதிகள் ஒதுக்க பா.ஜனதா முன் வந்தது. கடைசியாக 9 தொகுதி தர சம்மதித்தது. பா.ம.க. அறிவித்துள்ள பட்டியலில் இருந்து ஒரு தொகுதியை மட்டும் பாரதீய ஜனதா எடுத்துக் கொண்டு கூட்டணி கட்சிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது பா.ம.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பது வெளியாகவில்லை. பா.ம.க. தனது முடிவை தெரிவித்து விட்டால் பொன்.ராதாகிருஷ்ணன் அது பற்றிய முடிவையும் .அறிவித்து விடுவார். இல்லையெனில் தே.மு.தி.க.வை மட்டும் முதலில் அறிவிப்பார்.
அதேசமயம் பா.ம.க. தனது வேட்பாளர்களிடமும் கருத்து கேட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பா.ம.க. முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க._பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் இடம் பெற்றால் தே.மு.தி.க.வுக்கு 12 தொகுதிகள், பா.ம.க.-9, பா.ஜனதா-9, ம.தி.மு.க.-5, ஐ.ஜே.கே., கொங்கு நாடு கட்சி, இஸ்லாமிய கட்சி, தலித் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த 4 கட்சிகளும் பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் நிற்கும் என்று கூறப்படுகிறது.
![]()

