டெல்லி சட்டப் பேரவையில் ஜன் லோக்பால் மசோதா நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையும் விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் 48 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தங்களது அமைச்சரவை விலகுவதுடன், டெல்லி சட்டமன்றத்தையும் கலைக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநரிடம் சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜினாமாவுக்கு பின்னர், ஆம் ஆத்மியின் தலைமை அலுவலகம் முன்பு, கட்சித் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் உரையாற்றினார்.
முன்னதாக, டெல்லி சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதாவும், காங்கிரசும் டெல்லி அரசுக்கு எதிராக சதி செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக, அம்பானி மீது வழக்குப் பதிவு செய்த பின்னரே, தமது அரசுக்கு எதிராக சதி நடைபெறுவதாவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். மேலும், இன்றைய சட்டப் பேரவைக் கூட்டம் தான் தனது கடைசி கூட்டமாக இருக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.
![]()

