மார்ச் 21, கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள்.
காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ளது. கடல் மட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் தேடுதல் நடத்த வேண்டியிருக்கும். நீருக்கு அடியே தேடல்கள் உடனடியாக சாத்தியமில்லை என்கிறார்கள் அவர்கள்.
இதுதவிர வேகமான காற்றும் அப்பகுதியில் தற்போது அடித்துக் கொண்டிருக்கிறது.
நாளை மீண்டும் விமானங்கள் மூலம் தேடுதல் தொடங்கப்படும்போதும், கடல் மட்டத்துக்கு நெருக்கமாக செல்ல மாட்டார்கள் எனவும், அதிகபட்சம் 15,000 அடி உயரம் வரைதான் விமானங்களை கீழிறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இதனால், சாட்டலைட் இமேஜில் தென்பட்ட பொருட்கள் லொகேட் செய்யப்பட்டாலும், அவற்றை அணுகுவது சாத்தியமில்லை என்கிறார்கள்.
தொழில்நுட்பம் மூலம் நெருக்கமாக போட்டோக்களை எடுக்கலாம். அவ்வளவுதான்.
கடலில் மிதக்கும் பொருட்களை எடுத்து ஆராய்வது என்றால், அந்தப் பகுதிக்கு கப்பல்கள் வந்துசேர வேண்டும். இன்று இரவு அந்தப் பகுதிக்கு வர்த்தக கப்பல் ஒன்று வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தேடுதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் அல்ல. அந்தப் பகுதியால் சென்றுகொண்டு இருக்கும் ஒரு கப்பல். இதனால் அந்த கப்பலில், கடல் தேடுதலுக்கு தேவையான நவீன உபகரணங்கள் இருப்பது சந்தேகமே. கடற்படை கப்பல்கள் அந்த இடத்தை சென்றடைந்தால்தான், கடலில் மிதக்கும் பொருட்களை எடுத்து ஆராய்வது சாத்தியமாகும்.
![]()

