2016-rewind

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம். அதுபோல், இந்த ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே.

ஜனவரி

  • பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் உள்ளே நுழைந்து… பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் காலமானார்.
  • காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சயீத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
  • அ.தி.மு.க-வில் இருந்து பழ.கருப்பையா நீக்கப்பட்டார்.
  • சென்னை மாநகராட்சி, ‘பெருநகர சென்னை மாநகராட்சி’ என அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி

  • தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது.
  • சியாச்சின் பனிச்சரிவில் 6 நாட்கள் புதையுண்டு கிடந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர், நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.
  • அப்துல் கலாம் பெயரில், அவரது ஆலோசகர் பொன்ராஜ் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார்.
  • தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் ராஜினாமா செய்ததால். விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
  • மும்பையில் சொத்துத் தகராறில். குடும்பத்தினர் 14 பேரை விருந்துக்கு அழைத்து கொலை செய்தவர், பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச்

  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவுசெய்தது.
  • தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
  • தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டு விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
  • பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா, மாரடைப்பால் டெல்லியில் காலமானார்.

ஏப்ரல்

  • கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்த கோயில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட தீவிபத்தில் 126 பேர் பலியானார்கள்.
  • மராட்டிய மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோயில் கருவறையில் பல நூறு ஆண்டுகளாக பெண்கள் வழிபடுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது.
  • பீகாரில், உடனடியாக முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
  • தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி அவதூறாகப் பேசிய வைகோ, அவரிடம் உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
  • தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் மத்திய அரசால் முடக்கப்பட்டது.

மே

  • தமிழக சட்டசபைத் தேர்தலில் பணம் விநியோகம் தொடர்பாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
  • தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.
  • அசாமில் பி.ஜே.பி-யும், புதுச்சேரியில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியைப் பிடித்தன.
  • புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.
  • கேரளாவில் பினராயி விஜயனும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

ஜூன்

  • சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ.டி. பெண் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
  • ஓசூரில், நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ் ஏட்டு முனுசாமி மரணம் அடைந்தார்.
  • புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்றார்.
  • காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி அகமது பர்கான் வானி, சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தம் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை

  • சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர், போலீஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
  • தமிழக சட்டசபை தேர்தலின்போது. திருப்பூரில் கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
  • எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • டெல்லி விமான நிலையத்தில் எம்.பி-க்களான திருச்சி சிவாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆகஸ்ட்

  • தமிழக கவர்னராக (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார்.
  • பிரதமர் மோடி அணிந்த சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
  • ஒடிசாவில், மஜ்கி என்பவர் இறந்துபோன தன் மனைவியின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ. வரை நடந்துசென்றார்.
  • சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
  • ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர்

  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 40 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
  • தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.
  • சுவாதி கொலை வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மின் வயரை கடித்துத் தற்கொலை செய்துகொண்டார் எனச் சொல்லப்பட்டது.
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதா, திடீர் உடல்நலக் குறைவால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
  • தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அக்டோபர்

  • சென்னை கிண்டி அருகே தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியாயினர்.
  • ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக ஆஸ்டனியோ குட்டரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மத்தியப்பிரதேசத்தில் சிறைக் காவலாளியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய 8 சிமி கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • பிரபல அமெரிக்க இசைக் கலைஞரான பாப் டிலானுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகள், ஓ.பி.எஸ்ஸுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

நவம்பர்

  • 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
  • பெங்களூருவில், ஜனார்த்தன ரெட்டி தன் மகள் திருமணத்தை 650 கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடத்தினார்.
  • சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிக்கப்பட்டது.
  • கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்.
  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் வெற்றிபெற்றார்.

டிசம்பர்

  • சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
  • நடிகரும், பத்திரிகையாளருமான சோ, மாரடைப்பால் காலமானார்.
  • தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ‘வர்தா’ புயல் தாக்கியதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
  • கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை.

Loading