கடந்த சில நாள்களாகவே தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக மன்னார்குடியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ‘மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தநிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு தினகரன் ஆதரவாளர்களைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. ஜெயானத்தின் கருத்துக்குப் பதிலளிகும் விதமாகத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இவரைத் தொடர்ந்து இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், `திவாகரன், காழ்ப்பு உணர்ச்சி காரணமாக இப்படிச் செயல்படுகிறார். அவர் சில நாள்களாகச் சசிகலாவையும் என்னையும் பற்றி தவறாகப் பேசிவருவதாகப் பலரும் சொன்னார்கள். ஆனால், அது குறித்து எனக்குக் கவலை இல்லை. ஜெயலலிதா இருக்கும் போதிலிருந்து நான் அரசியலில் இருந்துவருகிறேன் என்பதற்காகச் சசிகலா என்னை துணைப் பொதுச் செயலாளராக ஆக்கினார். இதற்காக, சசிகலாமீது உள்ள கோபத்தை என்மீது காட்டிவருகிறார். இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் வராது. அரசியல் வேறு குடும்பம் வேறு. தனி நபராக அவர் கட்சியை ஆளப் பார்க்கிறார்’ எனப் பேசியிருந்தார்.
தினகரன் பேச்சுகும் வெற்றிவேலின் பதிவுக்கும் பதிலளிக்கும் விதமாகத் தற்போது திவாகரனின் மகன் ஜெயானந்த் மீண்டும் ஒரு பதிவை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். `சசிகலா, திவாகரனுக்கு பிறந்த நாள் முதல் சகோதரர். அவர்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அக்காவைத் திட்டாத தம்பி உலகில் கிடையாது. இதைக்கூடப் பெரிதாக்க வெற்றிவேல் கர்வம் காட்டுவது ஏனோ?
அ.தி.மு.க வரலாற்றில் M.N என்று ஓர் அத்தியாயம் உண்டு. அதுபோல குடும்பத்தில் ஒரு சிலருக்கு உண்டு. நான் கேட்கும் கேள்வி… கழகத் தொண்டனாய் செயல் பட்ட ஒரு சிலருக்கு சசிகலா குடும்பம் என்ற பட்டத்தைத் தலையில் கட்டி, குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்கக் காரணம் என்ன. எங்களைத் திரைமறைவில் அசிங்கப்படுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் எனக் கனவு கண்டு சசிகலா குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களைச் சொல்லி ஒண்ணும் ஆகாது, தூண்டுபவர்களைச் சொல்ல வேண்டும்.
என் தந்தைக்குப் பதவி ஆசை இருந்திருந்தால் தினகரனுடன் ஒரு வருடத்துக்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொறுத்திருப்பார். சசிகலாமீது உள்ள களங்கத்தை தினகரன்தான் துடைத்தார் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலா மத்திய அரசாங்கத்துக்குப் பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சசிகலாவின் பக்கபலம் மற்றும் ஜெயலலிதா சசிகலாவை எடுக்கச் சொன்ன வீடியோ. இவை மூன்றும்தான் தினகரனை கரைசேர்த்தன. ஆர்.கே.நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்’எனப் பதிவிட்டிருந்தார்.
![]()

