Kabilsibil

புதுடெல்லி : சரமாரியாக ஊழல் புகாரை வாரி இறைத்து இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதும், பா.ஜ., காங்கிரஸ் என பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் , டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் கெஜ்ரிவாலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

கெஜ்ரிவால் நேற்று 169 பேர் கொண்ட ஊழல்வாதிகள் பட்டியலை வெளியிட்டார். இதில் காங்., பா.ஜ., கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பலர் அடக்கம். தமிழகத்தில் 5 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த ஊழல் வாதிகளுக்கு எதிராக பலமான வேட்பாளர்களை களம் இறக்குவோம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இவரது ஊழல் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், கோவை , மேட்டுப்பாளையம் என பல பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல இடங்களில் கெஜ்ரிவால் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின்கட்காரி தம் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய கெஜ்ரிவால் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கபில்சிபில் இன்று இது குறித்து கூறுகையில்; என் மீது எவ்வித ஊழல் புகாரும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு நான் 2 நாட்கள் கால அவகாசம் தருகிறேன். இதனை நிரூபித்தால் எனது அரசியல் வாழ்வில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்காத பட்சத்தில் அவரது முதல்வர் பதவியை இழக்க தயாரா ? கெஜ்ரிவால் ஏதேனும் குற்றச்சாட்டை சுமத்தியே வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். இதை வைத்து வரும் லோக்சபா தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் . டெல்லியில் ஆட்சிக்கு வருவதற்கும் இது போன்ற தவறான பிரசாரம் தான் செய்தார். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

Loading