narendra-modi

பிப்.11: அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பத்தை தொடர்ந்து அந்நாட்டுக்கான இந்திய தூதர் நான்சி பவுல் பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.

இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேரம், தேதி ஆகியவை வெளியிடப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா ஆகியவை மோடி பிரச்சனையில் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது.

குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை காரணம் காட்டி, நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது. தற்போது பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்கா தனது நிலையை மாற்ற தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மோடி விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் எனவும், விதிகளின் அடிப்படையில், மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் போன்று அவரது விண்ணப்பமும் ஆய்வு செய்து விசா வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் எனவும் அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேரி காப் கடந்த 1-ம் தேதி தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிஜேபிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், மோடியை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அதற்கான அனுமதியை எதிர்பார்த்து இந்தியாவுக்கான அமெரிக்க உயர் தூதர் நான்சி பொவெல் தூது அனுப்பியுள்ளார். இந்த மாதத்துக்குள் இருவரும் சந்தித்து பேசக்கூடும் எனவும் இந்தியாவின் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர், ‘கடந்த நவம்பர் மாதம் முதல் இந்திய-அமெரிக்க நல்லுறவை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோருடனான தொடர்புகளை பெருக்கிக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு கட்டமாக மோடி-பொவெல் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’ என்று தெரிவித்தார்.

Loading