பிப்ரவரி 17: கச்சத்தீவு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவு என்றுமே இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருந்தது இல்லை என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே கச்சத்தீவு, இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைக்குரிய பகுதியாக இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் எல்லை வரையறை செய்யப்பட்டபோது, கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியானது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
1974 மற்றும் 76-ம் ஆண்டுகளில் கையெழுத்தான கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தெரிவித்து, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவோடு இணைக்க வேண்டும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் மீனவர்களுக்குத் தகுந்த இழப்பீடுகளை மத்திய அரசு வழங்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு வரும் 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
![]()

