இந்தியாவை முன்னேற்ற பாஜகவால் முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்காவில் சனிக்கிழமை நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: பாஜக மற்றும் அக்கட்சி அங்கம்வகிக்கும் தேசிய ஜனநாயககூட்டணிக்கு மக்கள் மீது அக்கறையில்லை.
நரேந்திரமோடி சுயநல அரசியல் நடத்துகிறார். நரேந்திரமோடியால் இந்தியாவை வழிநடத்தமுடியாது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் மதவாதசக்திகள். இந்தியாவின் முன்னேற்றம் பாஜகவால் சாத்தியமில்லை. மத உணர்வை தூண்டி, அதன்மூலம் அரசியல் லாபம் பெற முயற்சிக்கு கட்சிகளால் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி சாத்தியமாகும்
எனக்கு பதவி, அதிகார ஆசை கிடையாது. நாட்டுமக்களின் நலனுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வதே என் வாழ்க்கையின் நோக்கம்.
மத்தியில் 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் உணவுபாதுகாப்புச்சட்டம், தகவலறியும் உரிமைச்சட்டம், நில கையகப்படுத்தல் சட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நாட்டுக்கு நல்லதுசெய்துள்ள எங்கள் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். என்றார்.
சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், “கடந்த 2007-ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சோனியா, மோடியை ‘மரணங்களின் வியாபாரி’ என்று விமர்சித்தார். ஆனாலும் கூட பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது. இதே போல் தான் தற்போதும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி உறுதி” என்றார்.
![]()

