மார்ச்04: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதாக தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிய அவர், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்கள் நாட்டை கொள்ளையடித்தது போல், கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொள்ளையடித்து வருவதாக அவர் தெரிவித்தார். எந்த தியாகத்தைச் செய்தாவது வெள்ளையர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் அப்போது எண்ணியதைப் போன்றே, தற்போதும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என மக்கள் எண்ணுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
மத்தியில் உள்ள மக்கள் விரோத அரசு தூக்கி எறியப்பட வேண்டும் எனக் கூறிய ஜெயலலிதா, தனது இந்த வேண்டுகோளை தமிழக மக்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றால், மாநில அரசால் மட்டும் முடியாது என்று தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படவும், தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவும் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள், அந்நாட்டு ராணுவத்தால் கொன்று குவிக்கப்படுவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆயுத உதவிகள் செய்ததாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். மேலும், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தான், அத்யாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
![]()

