virat-kohli
மார்ச் 10 கூடங்குளம் அணு உலை எதர்ப்பு போராட்ட குழு தலைவர் உதயகுமார் தமிழக தலைமை பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை விரைவில் கெஜ்ரிவால் தமிழகம் வந்து அறிவிக்கிறார்.
சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார். அவர் மட்டுமல்லாமல் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். தமிழகத்தில் இந்தக் கட்சி எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உதயகுமார், ஜேசுராஜ் மற்றும் புஷ்பராயன் ஆகியோர் முறையே கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. நேற்று நெல்லையில் இக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத உதயகுமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். தேர்தல் பிரசாரத்தையும் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம். இந்த நிலையில் உதயகுமாருக்கு கட்சியில் தலைவர் பொறுப்பு அளிக்கப்படவுள்ளது. மாநிலத் தலைவராக அவரை நியமிக்கவுள்ளனராம். உதயகுமாரை மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் கெஜ்ரிவாலை வலியுறுத்தியுள்ளனராம். ஏற்கனவே கெஜ்ரிவாலுக்கு உதயகுமாரை நன்றாகத் தெரியும். கூடங்குளம் போராட்டக் காலத்திலிருந்தே அவருடன் கெஜ்ரிவால் நெருங்கிப் பழகி வருகிறார். எனவே அவரும் கூட உதயகுமாருக்கு தலைவர் பதவியை வழங்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் உதயகுமாருக்கு ஆதரவு திரட்ட கன்னியாகுமரிக்கு வரவுள்ளார் கெஜ்ரிவால். அப்போது அவர் முறைப்படி உதயகுமாரை கட்சியின் தமிழக தலைவராக அறிவி்ப்பார் என்று கூறுகிறார்கள். உதயகுமார் தலைவரானால் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்தில் புதிய அடையாளம் கிடைக்கும். மேலும் தமிழக மீனவர் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி புதிய சக்தியாக ஆம் ஆத்மியை மாற்ற உதயகுமார் முயல்வார் என்பதால் ஆம் ஆத்மி மற்றும் உதயகுமாரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

Loading