mettur-dam

ஆகஸ்ட் 10, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அணையின் நீர்மட்டம் உயர்ந்துள் ளதால் அறிவித்த நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணையில் அப்போதிருந்த நீர் இருப்பையும், நீர்வரத்தையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 15 முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கடந்த 7-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தேன்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டதால் இதுவரை சுமார் 12.40 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் அளவு 103.10 அடியாக உள்ளது. மேலும், வினாடிக்கு சுமார் 90 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவு நீர் தொடர்ந்து வரக்கூடும் என்றும் தெரிகிறது.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்கட்டமாக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Loading