பிப்ரவரி 20: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இம்முடிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த ராகுல், “நான் மரண தண்டனைக்கு எதிரானவன் தான்.
இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் நாட்டிற்காக உயிர் நீத்த என் தந்தை திரும்பி வரப் போவது இல்லை. எனினும், நாட்டின் பிரதமராக இருந்தவரை கொன்றவர்களை தண்டிக்காமல் விட்டால், சாதாரண மக்கள் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ராஜீவ் காந்தி என் தந்தை என்பதற்காக நான் இதனைச் சொல்லவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால், நாட்டின் நலன் கருதியே சொல்கிறேன். இதனை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
![]()

