சென்னை, பிப்ரவரி 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
எழும்பூர் பின்னி லிங் சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், ஏராளாமான காங்கிரஸ் பிரமுகர்களும், படுகொலையின் போது உயிர்நீத்த 15 தமிழரின் குடும்பத்தினரும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது பேசிய ஞானதேசிகன் உள்ளிட்ட தலைவர்கள், ராஜிவ் படுகொலை விவகாரத்தை அரசியல் ஆக்க முயற்சிக்கும் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். மற்ற கொலை வழக்குகள் போல் ராஜிவ் கொலை வழக்கை சாதாரணமாக கருதக் கூடாது என்றும், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
![]()

